உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் நினைவாக இலவச மளிகை பொருட்கள்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த உத்தமராஜ் என்ற குமார் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் முழுவதும் தானம் செய்யப்பட்டது. இவரது நினைவு நாளன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல்வேறு சமூக சேவையை செய்துவருகின்றனர்.

இன்று அவரது 18ஆம் ஆண்டு நினைவாக கோவையை அடுத்த கலங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் தினந்தோறும் பசியால் வாடி தவிக்கும் 100க்கு மேற்பட்ட ஏழை மக்களுக்கு 1மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் அங்கு வசிக்கும் இரண்டு ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்புக்கான புடவைகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டதோடு அங்குள்ள சிறுவர்களுக்கு உத்தமராஜின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினர்.