திராவிட இயக்கங்களுக்கு எதிரான சூழல்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை இந்த அறிகுறிகள் காட்டுகின்றது. கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தன போக்குடன் செயல்படுகின்றது. இது கண்டனத்திற்குரியது என்று சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்படவில்லை. 3 இடங்களில் கோவில்களில் அம்மன் சேலை எரிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்களை  மனநிலை பாதிக்கபட்டவர் செய்தார் என கூறுவது ஏற்கும்படி  இல்லை. திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறை அதிமுகவும் செய்கின்றது. இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை.

கோவைக்கு இஸ்லாமிய பயங்கரவாதம், தனி தமிழ் நக்சல் இயக்கங்கள் ஆகிய இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன. இதை முளையிலேயே  கிள்ளி எறிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க நிர்வாகிகள் வீடுகள் முதலான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்க கூடாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாட பா.ஜ.க தயங்காது. பா.ஜ.க தேர்தலை பற்றி கவலைப்படாது. முதல் சிந்தனை மக்களின் பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இருப்பதும் தான்.

4 இடங்களில் கோவில்கள்களை  தாக்கியது மனநிலை பாதிக்கப்பட்டவர் என காவல் துறை சொல்வது ஏற்கும் படியாக இல்லை. இது புனைக்கப்பட்ட கதையாக இருக்கின்றது. ஏவி விட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். முருகன் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காப்பதால், திராவிட இயக்கங்களுக்கு எதிராக மக்கள் திரள வேண்டிய சூழல் இருக்கின்றது. கோவில்களை தாக்கப்படுவதை ஸ்டாலின் கண்டிக்கின்றார் என்றால் இந்துகளின் ஓட்டின் முக்கியத்துவம்  தெரிந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அதிமுக விழித்துக்கொள்ள வில்லை என்றால் மிகப்பெரிய தோல்வியை தழுவும். மாநில  அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டிலும், நடுநிலையோடு வெளிப்படையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க  இருக்கின்றோம்.