கோவையிலிருந்து திரிபுரா மாநிலம் சென்ற 48 தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் இருந்து திரிபுரா மாநிலத் தொழிலாளர்கள் 48 பேர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை பல்வேறு சிறப்பு ரயில்களின் மூலமாக சுமார் 50 ஆயிரம் பேருக்கும் மேலான தொழிலாளர்கள் ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள போடிபாளையம் பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த திரிபுரா மாநில இளைஞர்கள் 48 பேர் தங்களின் ஊர்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இது குறித்து திரிபுரா மாநில அரசிடம் பேசி அவர்களுக்கு அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இரவு 11 மணிக்கு திரிபுரா மாநிலத்திற்குச் செல்லும் சிறப்பு ரயில் மூலம் செல்ல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டு சிறப்பு பேருந்துகள் மூலமாக, சென்னைக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். முன்னதாக அவர்களை சமூக இடைவெளி விட்டு வரிசைப்படுத்தி தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி பேருந்துகளில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.