பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மீறினால் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்து புகார்கள் வரப்பெற்றுள்ளன.

இவ்வாறு பட்டம் விட்டு விளையாடுவதால் பட்டம் அறுந்து அருகில் உள்ள உயரழுத்த மின்பாதையில் சிக்கி மின் தடை ஏற்படுவதுடன், மின்சார வாரியத்திற்கு இது பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது. அத்துடன், சாலையில் செல்லும்போது பயணிகள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது.

எனவே, மின் தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல் இருக்கவும், உயிரிழப்பு போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கவும், பட்டம் விட்டு விளையாடுவதை சிறுவர்கள், சிறுமியர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் பட்டம் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி சிறுவர்கள் பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.