பாகுபலி உருவ சோப்பின் மூலம் கொரோனா விழிப்புணர்வு

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஊ.எம்.டி.ராஜா (நல்லறம் அறக்கட்டளை உறுப்பினர்).

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் தாமாகவே  தங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் தாக்குதலில் இருந்து பெருமளவு காத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. வெளியே சென்று வரும் மக்கள் அனைவரும் கிருமி நாசினிகள் அல்லது சோப்பு கட்டிகளைக் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யூ.எம்.டி.ராஜா  மக்களிடையே மிகவும் பிரபலமான திரைப்பட கதாபாத்திரமான பாகுபலி உருவத்தை 20 சோப்புகளை கொண்டு உருவாக்கியுள்ளார். “பாகுபலியானாலும் ஆகும் பலி” மையக் கருத்தை முன்வைத்து இந்த உருவத்தை செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கிருமிநாசினிகள் போன்றவை கிடைக்கவில்லை என்று வேதனை கொள்ளாமல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் சோப்பு கட்டிகளை கொண்டே கைகளை கழுவி நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை மக்களிடையே உணர்த்தும் வகையில் இந்த உருவத்தை செய்துள்ளதாக தெரிவித்தார். கிருமிநாசினிகள் அதிக விலையில் விற்கப்படும் நிலையில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் குளியல் சோப்புகள் குறைந்த விலையே என்றும் அதனைக் கொண்டு நம்மை நாமே தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.