7 பேருக்கு  மறுவாழ்வு அளித்த 50 வயது பெண்

கோவை மணியக்காரன்பாளையம், பாலமுருகன் நகரில் வசிக்கும் சதீஷ்குமார் மற்றும் தனசேகர் ஆகியோரின் தயார் சாந்தமணி வயது 50 இவர் கடந்த 06.12.19 தேதி அன்று  இரத்த அழுத்தம் அதிகமாகி  மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவிழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 08.12.19-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது மகன்கள் சதீஷ்குமார் மற்றும் தனசேகர் ஆகியோர் தயார் சாந்தமணி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டது. நுரையீரல், கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்  உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் என்றார். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய சாந்தமணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.