விமானத்தில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சு காப்பாற்றிய சீன டாக்டர்

தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து நியூயார்க்கிற்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் முதிய பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதித்தனர்.

சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த மருத்துவர்கள் விமானத்தில் கிடைத்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினர். ஆனால் நோயாளியை உயரத்தில் வைத்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறும் என்ற நிலை இருந்தது.

சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் யாரும் எதிர்பார்க்காத அந்த செயலை செய்தார் ஜாங்ஹாங். நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினார். சுமார் 800 மில்லி சிறுநீரை வெளியேற்றினார் அந்த டாக்டர்.

கிட்டத்தட்ட 37 நிமிடங்கள் நீண்ட இந்த சிகிச்சைக்குப் பிறகு முதியவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். டாக்டரின் இந்த துரித செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 

 

Source : News18 Tamil