பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை நாட்டின் 13வது குடியரசு தலைவராக விளங்கிய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்குவதாக கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் சேர்த்து மூவருக்கு பாரத ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது.

இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

இதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிடமும் பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது. இதுவரை மொத்தம் 45 பேர் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.