தமிழக முதல்வர் அத்தி வரதர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் எழுந்தருளிய 23வது நாளான நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசித்தார். பின்னர் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் சென்று அங்குள்ள உயரதிகாரிகளிடமும் அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.55 மணியளவில், காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். கோவில் வாசலில் இருந்து சிவப்பு கம்பளம் அத்திவரதர் சன்னதி வரை போடப்பட்டு இருந்தது. பச்சை வஸ்திரம், முந்திரி, திராட்சை, கற்கண்டு, பாதாம் பருப்பு போன்றவற்றை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் துளசி மாலை, மல்லிப்பூ மாலை போன்றவற்றையும் வைத்து கோவில் பட்டாட்சியாரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். அவை அனைத்தும் அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் அவர் கோவிலில் பணிபுரியும் 33 பட்டாட்சியார்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்திரத்தை வழங்கினார். இலவச தரிசன பாதைகள், சுகாதார வசதிகள், குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றி அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கெட் வழங்குமாறும் அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

முன்னதாக காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் மக்களுக்கு வேண்டிய வசதிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அவரது வருகையையொட்டி ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தது வேதனைகுறியது என்று 102 வயதான ஒருவர் தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி, போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்தது.

நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்குள் இருந்தனர். அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அத்திவரதரை தரிசித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு உயர் அதிகாரிகளுடன் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.