தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2024-ஐ முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவுகள் ஆகியோர் இணைந்து கோவை மாநகர காவல் துறையுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இதில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு மாணவர்கள் 350 பேர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து வஉசி பூங்கா வரை பேரணியாகச் சென்றனர்.
நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தல், தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிதல், மித வேகத்தில் பயணித்தல், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடுதல் குறித்து விழிப்புணர்வு பதாகைகளோடு பேரணி நடைபெற்றது.
பேரணியில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் ராஜகோபால், மெடிக்கல் சூப்பர் இன்டென்ட்டென்ட் அழகப்பன், மருத்துவர்கள், செவிலியர்கள், மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரி சிற்றரசன், கல்லூரி முதல்வர்கள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், போக்குவரத்துக் காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.