“நான் என்றும் உங்கள் சகோதரன்”: நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்று அவர் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

அப்போது அவர் மக்களிடம் பேசுகையில்: ” 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி. நான் என்றும் உங்கள் சகோதரன். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து கோவைக்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளேன்.

சாலைகள், பாலங்கள், கூட்டுக்குடிநீர் திட்டம், ஐந்து கல்லூரிகள் என பல திட்டங்களை கொடுத்துள்ளோம். அதனால்தான் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். விடுபட்டுள்ள பணிகளை அரசு அலுவலர்கள் நடுநிலையோடு செய்து முடிக்க வேண்டும்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக கொடியேற்றி, கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவபடுத்தி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு மதிய உணவுதிட்டத்தை துவக்கிவைத்தார்.