பார்க் கல்விக் குழுமத்தின் பொன்விழா விருதுகள்!

50 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியில் சிறந்து பணியாற்றி வரும் பார்க் கல்விக் குழுமத்தின் பொன்விழா விருதுகள் நிகழ்ச்சி கோவை கணியூரில் உள்ள பார்க் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் ரவி, தலைமை நிர்வாக செயலாளர் அனுஷா ரவி மற்றும் செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறைகள் மற்றும் ஊடகத் துறைகளில் சிறந்து விளங்கும் தங்கள் நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு “பார்க் பொன்விழா முன்னாள் மாணவர் விருது 2023” வழங்கி சிறப்பித்தது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் கலந்து கொண்டு, விருதுகள் வழங்கினார்.

மேலும், விழாவின் சிறப்பம்சமாக, இந்தியாவின் நிலவு மனிதன் என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு ஆகியோருக்கு ” பார்க் பொன் விழா துரோணா விருது 2023″ வழங்கப்பட்டன.

அதுமட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப் பணியில் சிறந்து செயலாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு “பார்க் பொன்விழா ஆசிரியர் விருது 2023” வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.