ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலையால் காவல்துறை அதிர்ச்சி..

கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே விஜயகுமார் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்கொண்டார்.

இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இச்சம்பவம் தமிழக காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.