கோவையில் கமிஷன் வாங்கி தருவதாக கூறி 11 லட்சம் மோசடி

கோவை கணபதியை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 35). இவர் தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது டெலிகிராமுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அந்த நபர் எனக்கு பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறினார்.

மேலும் டெலிகிராமில் ஒரு குழுவில் என்னை இணைத்து விட்டார். அதில் பல கட்டங்களாக பணிகளை (டாஸ்க்) கொடுத்தார். பின்னர் என்னை முதலீடு செய்ய சொன்னார். குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் நானும் சேமித்து வைத்திருந்த பணத்தை சிறுக சிறுக தவணை முறையில் அனுப்பினேன்.

முதலில் எனது பணத்திற்கு ஓரளவு பணம் கமிஷன் கொடுத்தார். இதனை நம்பிய நானும் பல கட்டங்களாக அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ. 11 லட்சத்து 12 ஆயிரம் அனுப்பினேன். ஆனால் அந்த நபரோ எனக்கு சில நாட்களுக்கு கமிஷன் பணம் தரவில்லை.

நான் கமிஷன் பணம் கேட்ட போது மேலும் பணத்தை கட்ட சொன்னார். அப்போது நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.