இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – பொதுமக்கள் அச்சம்

கோவை தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்தி வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன.

வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் நாள்தோறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிள்கிழமை நள்ளிரவில் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒருவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முற்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடையே வீட்டின் முன்பு  வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தியது.  இதனால்  அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்துள்ளன.

இதனிடையே அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையை  வனபகுதிக்குள் விரட்டினர்.

மேலும், யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும்,  மற்றும் பழுதடைந்த தெரு விளக்குகளை  சரி செய்ய வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.