கோவை பூங்காக்களில் யோகா செய்ய தனி  இடம் ஒதுக்க வேண்டும்! – வானதி சீனிவாசன்

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக  பாஜகவினர்களுக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கோவையில் உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்குச் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மேலும் உலக நாடுகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து வருகின்றது. உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருங்கிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காக்களில்  யோகா செய்வதற்கான தனி  இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில்  கட்டாயமாக்க வேண்டும். இது மத சம்மந்தமான விசயம் கிடையாது. ஆரோக்கியம் தொடர்பானது. யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழிதவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். தினமும் 30 நிமிடம் யோகா  கட்டாயமாக்க பட  வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகச்சை நடந்து பூரண குணமாக வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் அதை தான் நினைப்பார்கள், என்றார்.