இந்தியாவின் 4 முனைகளையும் 225 மணி நேரத்தில் பயணித்து அசர வைக்கும் நபர்.. எதற்காக தெரியுமா?

பெண் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்டும் நோக்கில் கோவையைச் சேர்ந்த தன்னார்வலர் 225 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 226 கிலோ மீட்டர் பயணித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனி பகுதி சேர்ந்தவர் சைக்கிள்ஸ்ட் விஷ்ணு ராம். இவர் பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் முன்னதாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையிலே, பெண் குழந்தை கல்வி மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் நான்கு திசைகளையும் இணைக்கும் விதமாக ரவுண்ட் ட்ரிப் முறையில் கார் பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் கடந்த மே 28 ஆம் தேதி காலை காவல்துறை அதிகாரி சங்கர் கொடியசைத்து இவரது பயணத்தை தொடங்கி வைக்க தனது கார் பயணத்தை ஆரம்பித்தார் விஷ்ணு ராம். அங்கிருந்து இந்தியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி அருணாச்சலம் மாநிலம் தேஜு சென்றார். தொடர்ந்து லடாக், மேற்கு எல்லையான குஜராத் மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மீண்டும் ஜூன் 7ம் தேதி சென்னை வந்தடைந்தார்.

மொத்தம் பத்து நாட்கள் மற்றும் 16 மணி நேரத்தில் விஷ்ணு ராம் இந்தியாவை வலம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது 16 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 12 ஆயிரத்து 226 கிலோமீட்டர் தூரம் பயணித்த விஷ்ணு ராம் குறைந்த நேரத்தில் இந்தியாவின் நான்கு எல்லைகளையும் கார் பயணத்தில் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

இவரது சாதனையை உலக சாதனை புத்தகமான வோர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் (World Record Union), ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் (Asia Book of Record), இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் (India Book of Record) ஆகியவை அங்கீகரித்துள்ளன.

இந்த பயணத்தின் மூலமாகவும், நண்பர்கள் உதவியுடனும் 6 லட்சம் ரூபாய் நிதியை திரட்டிய விஷ்ணுராம், அந்த நிதியை மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறை கட்டவும், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் காசோலையாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகாட்சி ஆணையரிடம் ஒப்படைத்தார்.