மக்காச்சோளத்தை தாக்கும் வெளிநாட்டு பூச்சி

தமிழகத்தில் மக்காச்சோளத்தை தாக்கும் வெளிநாட்டு வகை பூச்சி என சொல்லக்கூடிய படைப்புழுகளை(spodoptera frugiperda) கட்டுபடுத்தும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை இதனை கட்டுபடுத்தி விடலாம் எனவும் வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் படைப்புழுவின் சேதம் கடந்த ஜுலை மாதம் முதல் கார்நாடக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச் சோளத்தில் அதிக அளவு சேதத்தை உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்டர். கே. ராமராஜ், ஆராய்ச்சி துறை தலைவர், வேளாண் பல்கலைக்கழகம் கூறுகையில், “இந்த வகை பூச்சிகள் வெளிநாட்டிலிருந்து புதிதாக நம் நாட்டிற்கு வந்துள்ளது. முதலில் கார்நாடக மாநிலம் சிமோகாவில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது தற்போது தமிழகத்திலும் இது பரவியுள்ளது. கடந்த அகஸ்ட் மாதம் முதல் இதை கட்டுபடுத்தும் முறை குறித்து ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்டமாக இதை கட்டுபடுத்தும் முறை குறித்து கண்டறிந்துள்ளோம்.

இந்தப்புழு மக்காச்சோள செடியில் 15 நாள் முதல் வரக்கூடிய குருத்து பகுதியில் சேதத்தை விளைவிக்கிறது. இந்தப்புழுக்கள் இலைகளின் மேல் பாகத்தை முற்றிலும் உண்ணுகிறது. இந்த புழுக்கள் தண்டுப்பகுதியை துளைப்பதில்லை மக்காச்சோள கதிர்களில் நுனி மற்றும் காம்பு பகுதியை உண்னுகிறது” என்றார்.

இதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து டாக்டர்.ராமசாமி, துணை வேந்தர், வேளாண்மை பல்கலைக்கழகம் கூறுகையில், “மக்காச்சோளம் கால்நடை தீவனங்களாக பயன்படுத்தப்படுவதால்  தமிழகத்தில் 15 சதவீதம் இதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எங்கெல்லாம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் விதைகள், வேளாண் பொருட்கள் போன்றவற்றின் மூலம் இது பரவ வாய்ப்புள்ளதால் அங்கு வேளான் துறை சார்ந்த வல்லுனர்கள் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து பொருட்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதனை கட்டுபடுத்தும் முறை குறித்தும் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விளக்குப்பொறி ஒன்றை ஒரு ஹெக்டேர் பரப்பில் வைத்து அந்துப்பூச்சிகளை கண்காணிக்க வேண்டும். பூச்சிகளின் முட்டைக்குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். இந்தப்புழுக்களை கட்டுபடுத்த இயற்கை வழியில் வழிமுறைகளை கையாள வேண்டும். பயிர்கள் சேதம் அதிகமாக காணப்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

இது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பூச்சியல் துறை தயாராக உள்ளதாகவும், விவசாயிகள் பூச்சியல் துறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் பூச்சியல் துறை தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.