3 பேருக்கு  மறுவாழ்வு அளித்த  50 வயது பெண் 

ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையத்தில் வசிக்கும் முத்துசாமி அவர்களின் மனைவி இந்திராணி  வயது 50 இவர் கடந்த 15.09.18 தேதி அன்று  இரத்த அழுத்தம் அதிகமாகி  மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவிழுந்தார் உடனடியாக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் கடந்த 24.09.18-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது கணவர் முத்துசாமி அவர்கள் மனைவி இந்திராணி  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்.  அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணி  குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.