தலையில் மாட்டிக்கொண்ட பிளாஸ்டிக் டப்பா 10 நாட்களாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் அவதிப்பட்ட நாய்

கோவை பீளமேடு, சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாயை, விலங்குகள் நல தன்னார்வ அமைப்பின் உதவியோடு திங்கட்கிழமை மீட்கப்பட்டது.

இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்ட தெரு நாய் ஒன்று உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்தது. நாயை மீட்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மூன்று நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை தி பிளானெட்டிக் பௌண்டேஷன் என்ற தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வந்தனர்.

அப்போது குமுதம் நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக நாய் படுத்திருந்தது. குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, லாவகமாக நாயை பிடித்த குழுவினர், அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து நாயை காப்பாற்றினர். இலவசமாக இந்த சேவையை செய்து வரும் தன்னார்வ அமைப்புக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.