விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி; வேளாண் விளை பொருட்களுடன் விவசாயிகள் போராட்டம்

ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக விவசாய நிலங்களை இருகூர் பேரூராட்சி நிர்வாகம் கையகப்படுத்துவதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேளாண் விளை பொருட்களுடன் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாழைத்தார், தென்னை குருத்து, மட்டை ஆகிய பொருட்களுடன் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு அருகில் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த இருகூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர். மேலும், விவசாயிகள் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமத்துள்ளதாக பொய்யான குற்றசாட்டை வைத்து வருகின்றனர்.

எனவே கோரிக்கையே இல்லாமல் சாலையை விரிவுபடுத்த தன்னிச்சையாக முயற்சிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.