கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு – ஆட்சியர் சமீரன்

கோவை ஆட்சியராக இருக்கும் சமீரன், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் கோவையில் பணியாற்றியது தனக்கு மனநிறைவான காலம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: அன்பார்ந்த கோவை மக்களே, வணக்கம். கோயம்புத்தூரில் பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த மனநிறைவான காலம் என்பது நிதர்சனம்.

இந்தக் காலக்கட்டத்தில் நாம் இணைந்து பல்வேறு செயல்களைச் செய்து விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய செயல்பட்டோம்.

கோவிட் 2ம் அலையின் நெருக்கடியான காலகட்டத்திலிருந்து தொடங்கி, இன்று வரை நீங்கள் அனைவரும் அனைத்து நல்ல காரணங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தீர்கள்.

கோவை மாவட்ட மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு எனக் கூறியுள்ளார்.