உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில்

4 வது முறையாக இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்கள் பட்டியல், செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல், சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை இந்நிறுவனம் ஆய்வு செய்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருவது வழக்கம். செல்வம், செல்வாக்கு, ஊடகம் மற்றும் தாக்கம் ஆகிய 4 துறைகளில் இருந்து பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பெற்றுள்ளார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2 ஆம் இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட்டும், 3-வது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4 வது முறையாக 36-வது இடத்தை பிடித்துள்ளார். எச்.சி.எல் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 53-வது இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடத்தையும், இந்தியா ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடத்தையும், பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் 72-வது இடத்தையும், நியாகா நிறுவனர் பால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பட்டியலில் முக்கியமாக, 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.