தற்கொலை தடுப்பு தினம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவர்கள்

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் மனம் அமைப்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டு தற்கொலையை தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் நிர்மலா இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியானது ரயில் நிலையம் வழியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து, நீதிமன்றம் வழியாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தை சென்றடைந்தது.