வரத்து குறைவால் கோவையில் 3 மடங்காக தக்காளி விலை உயர்வு

கோவையில் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா, ஆந்திரா பகுதியில் இருந்து தக்காளி வருகிறது. இதை தவிர கோவை தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

மார்க்கெட்டுகளுக்கு வரும் இந்த தக்காளியை சில்லறை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

இதனிடையே மார்க்கெட்டுகளில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி கடந்த மூன்று நாட்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 900 வரை விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும் அதுபோல் முகூர்த்த தினம் தினம், ஓணப்பண்டிகை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிக்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை காரணமாக தக்காளி பூக்கள் கருகி விழுந்துள்ளன. இதனால் தற்போது தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனையாகி வந்தது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். சிலர் தக்காளி விவசாயத்தை கைவிட்டதால் தற்போது வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனிடையே மீண்டும் தக்காளி பயிர் செய்து அறுவடை செய்யும் வரை இந்த விலையேற்றம் இருக்கும் என்றனர்.