கொப்பரை தேங்காயின் கொள்முதல் காலத்தை நீட்டிக்க வானதி சீனிவாசன் கோரிக்கை

கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகாமையில் உள்ள பகுதிகளில் தென்னை சாகுபடி, பிரதான விவசாயமாக உள்ளது. கொப்பரை தேங்காய் மூலம் கிடைக்கும் வருவாய் தான் விவசாயிகளுக்கு பெரும் ஆதாரமாக உள்ளது.

ஆனால், கொப்பரை தேங்காய்க்கு நிலையான, நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இடைத்தரகர்களும், வியாபாரிகளும் தங்களுக்குள் ‘சிண்டிகேட்’ அமைத்து தேங்காய், கொப்பரை விலையை தீர்மானிப்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக,
ஒரு கிலோ எண்ணெய் கொப்பரைக்கு ரூ. 105.90, ஒரு கிலோ பால் கொப்பரைக்கு ரூ.110 என்று நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, மத்திய அரசின் ‘நாபெட்’ நிறுவனம் மூலம், மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில், கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஜூலை 31-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளும், இடைத்தரகர்களும் ‘சிண்டிகேட்’ அமைத்து விலையை குறைத்துள்ளதால், வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காயை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். அரசு கொள்முதலை நம்பியே விவசாயிகள் உள்ளனர். எனவே கொள்முதல் காலத்தை ஜூலை 31 க்கு பிறகும், குறைந்தது ஒரு மாதமாவது நீட்டிக்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில், தேவையான இடங்களில் இல்லாமல் இருப்பதும் விவசாயிகளுக்கு பிரச்சினையாக உள்ளது. எனவே, தென்னை விவசாயம் அதிகமாக உள்ள பகுதிகளில், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தேங்காய் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசு, கிலோவுக்கு ரூ. 15 கொடுத்து, கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த மிக முக்கியமான பிரச்சினையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்கவும், கொள்முதல் காலத்தை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பாமாயில் வழங்கி வருகிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு தமிழக அரசு பெரும் தொகையை மானியமாக வழங்குகிறது.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்கினால், அதற்காக ஒதுக்கப்படும் மானியம், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு சென்று சேரும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொருளாளராக இருந்தபோது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் என்பதை இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதே, தென்னை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். எனவே விவசாயிகளின் இந்த நீண்டகால கோரிக்கையும் முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.