நொய்யல் ஆற்றில் மூழ்கும் வெள்ளலூர் பாலம்: அதிகாரிகள் ஆய்வு

கோவையில் பருவமழை பெய்து வரும் சூழலில் வெள்ளலூர் தரைப்பாலம் அவ்வப்போது மூழ்கிவிடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையே நொய்யல் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பாலம் பழுதடைந்திருந்த சூழலில், அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தின் கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை.

இதனிடையே கோவையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் வெள்ளலூரில் உள்ள தரப்பாலத்தின் மீது ஆற்று நீர் செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல அச்சமடைந்துள்ளனர்.

சிங்காநல்லூரியில் இருந்து வெள்ளலூர் செல்லும் பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் தரைப்பாலம் அவ்வப்போது ஆற்று நீரில் மூழ்கிவிடுவதால் குறித்த நேரத்திற்குள் பயணிக்க முடியமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு நொய்யலில் தண்ணீர் சென்றது. இந்த சூழலில், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது வெள்ளலூரில் மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.