வால்பாறையில் வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி ஒன்று முயலை கவ்வி செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனை மலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் முத்துமுடி பகுதியில் 8 மாத குட்டிப்புலி ஒன்று, வனத்துறையினரால் மீட்கப்பட்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த குட்டிப்புலி நல்ல நிலையில் இருக்கிறது.
அந்த குட்டிப்புலி தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால், மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தனிகூண்டு அமைத்து 9 மாதங்களாக வனத்துறையினர் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு வேட்டையாடுவதற்கான பயிற்சியளிக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் கூறினர்.
தற்போது அந்த பகுதியில் ஓடுகின்ற முயலை, அந்த புலி வாயில் கவ்விக்கொண்டு போகும் விடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். எனினும், இதற்கு இன்னும் பல்வேறு மாதங்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.