அக்னிபத் திட்டத்தில் விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஜூன் 24 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் என விமானப்படை அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு நீடிக்கும் நிலையிலும், இதன் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அக்னிபத்திட்டத்தின் கீழ் இந்திய விமான படையில் சேர்க்கை குறித்த அறிவிக்கையை முப்படைகளில் இந்திய ராணுவம் வெளியிட்டள்ள நிலையில், இந்திய விமானப்படை இன்று விண்ணப்பிக்கும் காலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்திய விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகிற 24 ம் தேதி காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஜூலை 24ம் தேதியில் இருந்து ஆன்லைன் தேர்வு நடைபெறும் என விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விரும்புவோர், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணைக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர 1999, 29 டிசம்பர் முதல் 2005 ம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத இந்திய குடிமகன்களும், நேபாளிகளும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.