பூட்டியிருக்கும்  போலீஸ்  செக்போஸ்டில்  போலீசார் நியமிக்கப்படுவர்

ஆணையர் பாலகிருஷ்ணன்

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் புதிய உத்தரவை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக  பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பிரதீப் குமார் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகரை பொறுத்தவரை போதை பொருட்கள் விற்பனை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மணல் கொள்ளை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளாக உள்ளது.

மேலும், ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருகின்றது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இதையொட்டி புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட  பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கையாக சில உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு காவல்துறைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். போலீசாரும் ரோந்து பணிகளை நடந்தே மேற்கொள்வது மிகவும் அவசியம் போன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.

இதன்மூலமாக Visible Policing என்ற திட்டத்தில் தீவிரம் காட்ட போவதாக தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது, அனைவரது பார்வையிலும் படும் வகையில் போலீசாரின் நடமாட்டம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட், அவுட் போஸ்ட்கள் பூட்டி கிடக்கின்றன.

அவற்றை திறந்து போலீசார் பணியாற்றும் வகையில் சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் பூத்களிலும் போலீசார் நியமிக்கப்படுவர். குற்றத் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும், என்று கூறினார்.