சொந்த ஊரில் சர்ப்ரைஸ் இ பி எஸ் க்கு வரவேற்பு

சேலம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில், எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவாளர்கள் திரண்டனர்.

அதிமுகவில் நாளுக்கு நாள் அரசியல் களம் சூடுபிடித்து கொண்டிருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலிருந்து தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் அதிமுக. தற்போது,  ஒற்றை தலைமைக்கான குரல் வலுக்கத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் உள்ளே கொண்டு வர வேண்டும் என்று சிலர்  கோஷங்கள் எழுப்பினர். ஆனால், அது காலப் போக்கில் மறக்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது.

இதனை  மையமாக வைத்து ஒற்றை தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டியும், பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, இன்று காலை சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை சந்திக்க அதிமுகவினர் திரளாக வந்த வண்ணம் இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார் என்றாலே, மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று வரவேற்பு அளிப்பார்கள். ஆனால்,  இந்த முறை சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஏராளமானோர் வந்து குவிந்தனர்.  இந்த விஷயம் எடப்பாடியை திக்குமுக்காட வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனை, முன்வைத்து அவரையே தலைமை பொறுப்பில் அமர வைத்து விடலாம் என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இதுபற்றி  மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் பேசுகையில், சேலம் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை எங்களுக்கு கட்சி கட்டுப்பாடு உண்டு. வழக்கமாக எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு வரும் போது மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்டோர் திரண்டு வந்து வரவேற்பு கொடுப்போம்.

அதன் அடிப்படையில் தான், இன்றைய தினமும் வந்திருக்கிறோம். எங்களை பொறுத்தவரை கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். தொண்டர்களின் முடிவே  கட்சி தலைமை எடுக்கும் முடிவு என்று தெரிவித்தார்.

ஒருபக்கம் ஓபிஎஸ் தான் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், மறுபக்கம் எடப்பாடி ஆதரவாளர்கள் எந்தவொரு குரலும் கொடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

வெறுமனே கட்சி கட்டுப்பாடு என்று கூறி சென்று விடுகின்றனர். அந்த அளவிற்கு தனது ஆதரவாளர்களை கட்டுக்குள் வைத்து அமைதிப்படை அரசியல் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எடப்பாடிக்கு ஆதரவு வட்டம் பெரிதாக இருந்தாலும், அவ்வளவு எளிதில் ஓ.பன்னீர்செல்வம் விட்டு தர மாட்டார் என்கின்றனர். இதுவரை விட்டுக் கொடுத்தது போதும், இனிமேல் விட மாட்டோம் என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.