மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: கோவையில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை

கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக மாவட்ட தொற்று நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.விஜயகுமாா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்துவதற்கு முன் உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு தொடர் மருத்து எடுத்துக்கொள்பவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது.

இத்திட்டத்தின் கீழ் உயா் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இரண்டு பாதிப்புகளும் உள்ளவர்கள் என புதிதாக 75 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 20 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகளில் 2 வது முறை பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவா்கள் 73 ஆயிரத்து 633 பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 37 ஆயிரத்து 314 பேர் மற்றும் இரண்டு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் 37 ஆயிரத்து 678 பேர் என மொத்தமாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 625 பேர் உள்ளனர். இவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.