கோவையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்

கோவைபுதூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், கழக தீர்மான குழு இணைச் செயலாளர் அரிமா முத்துச்சாமியுடன் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அண்மையில் அரிமா இயக்கம் மற்றும் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி சார்பாக, கோவைபுதூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தல், இலவச மருத்துவமனை கட்டுதல், நடைபாதை அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்வுகளின் துவக்கவிழா, கழக தீர்மான குழு இணைச் செயலாளர் அரிமா முத்துச்சாமி ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மைதானத்தை சீரமைக்கும் பணிகள் கோவைபுதூர் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கோவைபுதூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவருடன, புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.இராமச்சந்திரன், தீர்மானக்குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, பகுதி கழக பொறுப்பாளரும், மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் குனியமுத்தூர் இராஜேந்திரன், தணிக்கை இராஜேந்திரன், அவை தலைவர் மணி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், கோவை மாவட்டத்தில் கோவைபுதூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயன்படுத்துவதற்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த பகுதியில் இருக்கின்ற இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் விளையாடும் வகையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில், மாலை நேரங்களில் நல்ல காற்றை சுவாசிக்க கூடிய குறுங்காடுகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். குறுங்காடு அமைக்கும்போது சுற்றுச்சூழல் துறை மூலம், மரக்கன்றுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.