கடற்படை பவள விழா: கோவையில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணி

கொச்சியியில் உள்ள இந்திய கடற்படை பழுதுபாா்ப்பு தளத்தின் 75 வது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுயசார்பு இந்தியா திட்டத்தை நினைவு கூரும் விதமாக கடற்படை அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோா் 10 மோட்டார் சைக்கிள்களில் இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு வாரத்தில் சுமார் 1,600 கிலோ மீட்டா் தொலைவைக் கடக்கும் வகையிலும், தொழில் துறை பாதையாக அமைந்துள்ள கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையிலும் இந்த பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள்கிழமை கோவை வந்த இந்த பயணக் குழுவினர் கொடிசியா நிா்வாகிகளுடன் கலந்துரையாடினர். இதைத் தொடர்ந்து கோவை ஐ.என்.எஸ். அக்ரானியில் இருந்து சேலத்துக்கு நேற்று காலை புறப்பட்ட இந்த வாகன பயணத்தை கமாண்டிங் அலுவலா் அசோக் ராய் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.