பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்! – ராகுல் காந்தி கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த பல மாதமாகவே வரலாறு காணாதவகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசலின் விலை உச்சத்தை தொட்டிருந்தது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100க்கு மேல் விற்பனையானது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், தான், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்பதுடன், சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம், உர மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டார்.

ஆனால் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் ஞாயிறு அன்று பதிவிட்டிருப்பதாவது: கடந்த 2020 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ரூ. 69.5 ஆக இருந்த பெட்ரோல் விலை, 2022 மே மாதத்தில் ரூ.105.4 ரூபாயாக விலை உயர்ந்தது. நடப்பாண்டு மார்ச் 1 ஆம் தேதி ரூ.95.4 ஆகவும், மே ஒன்றில் ரூ.105.4 ஆக இருந்த பெட்ரோல் விலை மே 22 இல் 96.7க்கு விற்பனை செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பெட்ரோல் விலை நாள்தோறும் ரூ.0.8 மற்றும் ரூ.0.3 என்ற விகிதத்தில் உயரலாம் எனவும், பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணம் பெறுவதற்கு மக்கள் தகுதியானார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால், மக்களை முட்டாளாக்கும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.