‘பத்ரா’ பன்னாட்டு நிறுவனம் கோவையில் துவக்கம்

கோவையில் காப்பீட்டு துறை நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வரும் பத்ரா பன்னாட்டு நிறுவனத்தின் புதிய அலுவலகம் நவ இந்தியாவில் திறக்கப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.

இதன் திறப்பு விழாவில், பத்ரா நிறுவன பொது மேலாளர் ரகுநாதன், துணைத் தலைவர் எலிசபெத் மெகார்மிக் , நிர்வாக இயக்குனர் லட்சுமி, முதன்மை செயல் அதிகாரி ஜேசன் டேவிஸ், சர்வதேச சேவை வழங்குதலுக்கான இயக்குனர் வில் குக், தர இயக்குனர் இக்பால் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: இந்தியாவில் எங்களது நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அலுவலகத்தைச் திறந்துள்ளோம். இந்த அலுவலகத்தில் 300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

பி.காம்., எம்.காம் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இங்கு பணியமர்த்தப்பட உள்ளனர். எங்களது நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது 48 சதவீதம் எங்கள் நிறுவனத்தில் பெண்கள் பணிபுரிகின்றனர். இது விரைவில் 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா காலத்திலேயே எங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனக் கூறினர்.