கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

மேலும், வேளாண்துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 227 கோடி மதிப்பிலான வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் பேசியதாவது: விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். உழவர்களின் நன்மையை முன்னிலைப்படுத்தும் திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு தருகிறது.

5 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், விவசாயிகள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது எனக் கூறினார்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கலைஞர். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.

இருபோக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, திமுக அரசு விவசாயிகளை பெருமைப்படுத்தியுள்ளது எனப் பேசினார்.