– அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
வாழையை உலகளாவிய சந்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும், வாழை மரப்பட்டைகள், நார்கள் வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை அதிகளவில் விளைவதாகவும், வாழை தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வாழை வைத்து உலகளாவிய சந்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், வாழை மரப்பட்டைகள், நார்கள் வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க முன் வந்தாலும், ஐஐடி ஆகிய நிறுவனங்களை வைத்து startup நிறுவனங்கள் முன்வந்தாலும் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.
இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் வைக்கோலை மூலப்பொருளாகப் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்ற கேள்வியை பூண்டி கலைவாணன் எழுப்பினார்.
அதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து கூறுகையில், வணிக ரீதியாக வைக்கோல் தயாரிப்பது கடினம். மேலும் அதனை சேமித்து வைக்க அதிகமான இடம் தேவைப்படும்.
மேலும் மண் கலந்து வருவதால் காகிதம் தயாரிக்கும் இயந்திரங்கள் பழுது ஏற்படும், மேலும் காகித தொழிற்சாலை red+ வகை பிரிவை சார்ந்தது எனவே டெல்டா மாவட்டத்தில் அமைக்க இயலாது என்றார்.