பனை ஓலை வீடு: ஸ்ரீதர் வேம்புவின் புதிய அலுவலகம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மண், பனை ஓலை மற்றும் வைக்கோல் மூலமாக உருவாக்கப்பட்ட தனது அலுவலகத்தின் புதிய கூட்ட அரங்கம் மற்றும் அலுவலகத்தின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மண், வைக்கோல் மற்றும் சுண்ணாம்பு கற்களால் புதிய கூட்ட அறை மற்றும் சிறிய அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மேல்மாடியானது பனை ஓலையால் மூடப்பட்டிருக்கிறது. வெப்பமான நாளிலும் இந்த கட்டடம் மிக இதமானதாக உள்ளது. நான் இதை மிகவும் விரும்புகிறேன், இந்த கட்டடத்தை எனது அலுவலகமாக மாற்றியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு பக்கமுள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் புதிய அலுவலகம் குறித்த அவரின் பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.