கோவை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக இதுவரை 290 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொழில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, சர்வதேச நாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு அதிகளவில் விமானங்கள் வந்து செல்லும் வகையில், ஓடுதளப் பாதையை மேம்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

420 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவை விமான நிலையத்தின் ஓடுதளம் 9,500 அடி நீளத்துக்கு அமைந்துள்ளது. இத்துடன் கூடுதலாக 640 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை இணைத்து, ஓடுதளப் பாதையை 12,500 அடி நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக மொத்தம் 644 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இந்த நிலங்கள் சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், நீலாம்பூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ளன என்றும் தெரிவித்தனர்.

கையகப்படுத்த வேண்டிய நிலத்தில் 30 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்காக உள்ளது என்றும், இதை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். அதேபோல், 152 ஏக்கர் நிலம் இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக ஒதுக்க பாதுகாப்புத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.

மீதமுள்ள 462 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த பட்டா நிலங்களின் உரிமையாளர்களாக 3,075 பேர் உள்ளனர்.

விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக கடந்தாண்டு இறுதியில் ரூ.1,132 கோடி நிதி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

குடியிருப்பு நிலத்துக்கு ஒரு சதுரடிக்கு ரூ.1,500, விவசாய நிலத்துக்கு ஒரு சதுரடிக்கு ரூ.900 என இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வாரத்துக்கு சராசரியாக 4 முதல் 6 இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 290 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 172 ஏக்கர் இடமும் விரைவில் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றனர்.

 

Source: Hindhu Tamil Thisai