“குழந்தைகள் மீது உங்கள் கனவை திணிக்காதீர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின்

பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்தை, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பள்ளி அளவில் நிர்வகிக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,557 பள்ளிகளில் புதிய பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஜனநாயக முறைப்படி பள்ளி மேலாண்மைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்வாக, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், நம் பள்ளி நம் பெருமை விழிப்புணர்வு வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: பள்ளிப்பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம். யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான். அதனால் தான் பள்ளி கல்விக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவரின் சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் தான், கல்வி நீரோடை சீராக செல்லும். இதில் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டால் கல்வி தடம் புரண்டு விடும்.

குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கு தடைபோடாமல் உதவி செய்யுங்கள், வழி காட்டுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள். மாணவர்களை வளர்த்தெடுப்பது மட்டுமே பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளிகளும் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.

மேலும், குழந்தைகளின் கல்வி என்பது சமுதாயத்தின் அடித்தளம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல் எனக்குறிப்பிட்ட அவர், பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணை கண்டத்திற்கே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது எனவும் புகழாரம் சூட்டினார்.

மேலும், அனைத்துவகை வன்முறைகளில் இருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி பள்ளிகளை மேம்படுத்துவோம் என வலியுறுத்தினார்.