மனிதநேய அடிப்படையில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் – டெட்ரோஸ் அதோனம்

உக்ரைன் – ரஷ்யா போர் 50-வது நாளை எட்டியுள்ள நிலையில் இதுவரை 4.6 மில்லியன் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் மனிதநேய அடிப்படையில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது: இதுவரை 4.6 மில்லியன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 119 சுகாதார மையங்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன என கூறிய அவர், சுகாதார சேவைகள் தொடர்ந்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது என்றார்.

மனிதநேய அடிப்படையில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள டெட்ரோஸ் அதோனம் மருந்துகள், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல மனிதாபிமான வழித்தடங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.