அதிசய உறுப்பிற்கு அலட்சியம் காட்டாதீர்கள்!

தியாகராஜன் சீனிவாசன்,

இயக்குனர், சிறப்பு கல்லீரல் நோய் சிகிச்சை நிபுணர், எம்.ஜி.எம் ஹெல்த் கேர்

நமது உடலில் மிக முக்கிய பாகங்களில் ஒன்று கல்லீரல். மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மற்றும் சிக்கலான உறுப்பும் கூட. உடலின் செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு, உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் இதன் பங்கு அளப்பரியது. சாப்பிடும் அல்லது பருகும் எதுவாக இருப்பினும் அது கல்லீரல் வழியாகவே செல்கிறது. உடலின் தொழிற்சாலை என்று கூட இதனை கூறலாம். அப்படிப்பட்ட அதிசய உறுப்பு தான் கல்லீரல்.

மரபணு சார்ந்த பிரச்சனைகள், மது அருந்துதல் மற்றும் வைரஸ் பாதிப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இயக்குனர், தியாகராஜன் சீனிவாசன் பகிர்ந்து கொண்ட தகவலினை காண்போம்.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளும், காரணங்களும்:

மஞ்சள் காமாலை, வயிறு மற்றும் கால்களில் நீர் கோர்த்தல், மிகவும் தீவிர நிலையில் ரத்த வாந்தி, உடல் எடை குறைதல், தொற்று நோய் பாதிப்பு ஏற்படுதல் ஆகியவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

கல்லீரல் வியாதிகளுக்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. மது அதிகமாக அருந்துதல், வாழ்க்கை முறை மாற்றம், துரித உணவு சாப்பிடுதல், அதிக உடல் எடை, சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு அதிகமாதல், ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்களினால் கல்லீரல் பாதிப்படையும்.

சில சமயம் நம் நோய்த்தடுப்பு ஆற்றலே நமக்கு எதிராக வேலை செய்யும். இதனாலும் கல்லீரல் பாதிப்பு  ஏற்படுவதைக் காண முடிகிறது.

உரிய நேர சிகிச்சை அவசியம்:

மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி, வயிறு மற்றும் கால்களில் நீர்கோர்த்தல் பிரச்சனை இருந்தால் உடனடியாக  கல்லீரல் நோய் சிகிச்சை நிபுணரை அணுக வேண்டும். ஏனெனில் ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். இதுவே நோய் முற்றிய நிலையாக இருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆரம்ப நிலை பாதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் மூலம், மேலும் கல்லீரல் மோசமாவதை தடுக்க முடியும். மது அருந்துவதை தவிர்த்தல், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற சில பழக்கங்களினால் கல்லீரல் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

இரண்டாவது நிலையில், முதல் நிலையைக் காட்டிலும் கல்லீரல் அதிகமாக பழுதடைந்திருக்கும். இதனையும் சில மருந்துகள் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.

இதற்கு அடுத்த நிலையில், கல்லீரல் 70 முதல் 80 சதவீதம் வரை பாதிப்படைந்திருக்கும். இந்த நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக உள்ளது. அதிலும் சரியான நேரத்தில் இந்த சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?

கல்லீரல் முற்றிலும் பாதிப்படைந்த நிலையிலும், மருத்துவ சிகிச்சைகள் அளிக்க முடியாத நிலையின் போதும்  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒருவருக்கு தேவைப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் கல்லீரலை மூளை சாவு அடைந்த ஒருவரிடம் இருந்தோ அல்லது உறவினர்களிடம் இருந்தோ பெறலாம்.

தானம் பெறுபவரின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து, பாதிக்கப்பட்டவரின் நோயுற்ற கல்லீரல் அகற்றப்பட்டு கொடை கல்லீரலுடன் மாற்றப்படுகிறது. இதனை ஒரு புத்துயிர் என்றே கூறலாம்.

பல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை எம்.ஜி.எம் மருத்துவக் குழு வெற்றிகரமாக செய்துள்ளது. மேலும், தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு காப்பீடு திட்டம் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மது அருந்துவதால் என்ன பாதிப்பு?

பெண்கள் மது அருந்துவதால் அவர்களின் கல்லீரல் ஆண்களை காட்டிலும் விரைவிலேயே பாதிக்கப்படுகிறது. மேலும், நீண்ட நாட்களாக தொடர்ந்து மது அருந்தும் ஆண்களின் கல்லீரல் இரண்டு விதமாக பாதிப்படைகிறது.

ஒரே நாளில் அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் தீடிரென செயலிழக்கலாம் அல்லது கல்லீரல் மிகவும் மோசமடையலாம். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அடுத்ததாக, நீண்ட நாட்களாக மது அருந்துவதால் கல்லீரல் சிறுது சிறிதாக பாதிப்படையலாம்.

கல்லீரல் பாதிப்பு தீடிரென ஏற்படுமா?

சிலருக்கு திடீரென்று கல்லீரல் பாதிப்படையலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எலிக்கொல்லி மருந்து உட்கொண்டிருந்தால் அல்லது அதிகமான டி.பி. மருந்து உட்கொண்டிருப்பது, ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ், ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பாதிப்பு, மது அருந்துவது போன்றவற்றால் கல்லீரல் திடீரென்று பாதிப்படையலாம்.

கல்லீரல் தானம் எப்படி பெறப்படுகிறது?

மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து கல்லீரலை தானமாக பெறலாம். ஆனால் இந்த வகையில் பத்தாயிரம் பேருக்கு கல்லீரல் தேவைப்பட்டால் 200 அல்லது 300 பேருக்கு கூட கல்லீரல் கிடைப்பதில்லை.

அடுத்த நிலையில், உறவினர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். உறவினர்கள் அவர்களின் கல்லீரலின் ஒரு பகுதியை பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கலாம். இப்படி வழங்குவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் எழலாம். கல்லீரலை தானமாக வழங்கினாலும் அது மீண்டும் வளர்ந்து விடும். இது கல்லீரலுக்கே உரிய சிறப்பும் கூட. 6 வாரத்திற்குள்ளாகவே கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

கொடையாளிக்கு இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தானம் பெறுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவு தான்.

கல்லீரலை எப்படி பாதுகாப்பது?

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மது அருந்துவதை தவிர்த்தல், துரித மற்றும் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்த்தல், சத்தான உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், மருத்துவரின் மேற்பார்வை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்த்தல் போன்றவற்றால் கல்லீரலை பாதுகாக்கலாம்.

 

மேலும் விபரங்களுக்கு: www.livertransplantindia.hospital

தொடர்புக்கு:  +91 90807 41438