ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் உறுப்பு தானம்!

பல்லுயிர் காக்க விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

விருதுநகரில் ஆர்டிஓ ஆக பணிபுரிந்து வருபவர் பாஸ்கரன். இவருடைய இல்லம் கோவையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் இவருடைய மகன், மகள் மற்றும் யாராவது பிறந்தநாள் என்றால் அப்போது ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியோடு ரத்ததானம் செய்து வந்துள்ளனர்.

இவர் இன்று தன்னுடைய மகனின் 22 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரும், அவருடைய மகன், மகள், மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் இருபத்தி மூன்று முறை இரத்த தானம் செய்துள்ளார் பாஸ்கரன்.

மதுரையில் இவர் ஆர்டிஓ வாக இருந்த பொழுது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் கண்தானம் செய்திருக்கின்றனர். இன்றைக்கு மீதம் இருக்கக்கூடிய அத்தனை முக்கிய உறுப்புகளையும் தானம் செய்துள்ளனர்.

உடல் உறுப்பு சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இத்தனை நாட்களாக இவர் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.