கோவை மாநகராட்சியில் துணை மேயராக போட்டியின்றி இரா.வெற்றிசெல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ள 92 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.வெற்றிசெல்வன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சியின் துணை மேயர் பொறுப்புக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்ற துணை மேயர் தேர்தலுக்கு இரா.வெற்றிசெல்வன் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரான கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அறிவித்ததோடு அவருக்கு வெற்றி சான்றிதழும் வழங்கினார். இதையடுத்து மேயர் கல்பனா, திமுக நிர்வாகிகள் மற்றும் சக கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சர், அமைச்சர் ஆகியோருக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், கோவை மாநகரத்தில் நிலவி வரும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.