பி.பி.இ உடை அணிந்து மனுதாக்கல் செய்த வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு மண்டலம் 94 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ள சக்திவேல்(45) என்பவர் குனியமுத்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்து சென்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக இது போன்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

முதலில் இவரது உடையை கண்டு அதிகாரிகள் வியப்படைந்த நிலையில் இவரின் விளக்கத்தை கேட்டப்பின் மனுவை பெற்று கொண்டனர்.

மேலும் இவர் அப்பகுதியில் கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.