முன்பு இருந்த உத்வேகம் இப்போது இல்லை – ஓய்வு குறித்து சானியா

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, விளையாட்டில் தனக்கு முன்பு இருந்த உத்வேகம் இப்போது இல்லை எனக் கூறி, டென்னிஸ்சில் இனியும் தொடர மனமில்லை என தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சானியா டென்னிஸ் வீராங்கனையாகத் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள சானியா, பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் 2022 தொடரில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் 35 வயதான மிர்சா மற்றும் அவரது உக்ரைன் ஜோடி நதியா கிச்செனோக் 4-6, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி போராடி தோல்வியடைந்தது.

இந்நிலையில் ஓய்வு தொடர்பாகப் பேசியுள்ள சானியா, “எனக்கு வயதாகிக்கொண்டே வருவதால் உடல் சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். இன்றைய போட்டியில் கூட முழங்கால் வலித்தது. நாங்கள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இதுபோன்ற காயங்களில் இருந்து குணமடைய இப்போதெல்லாம் நிறைய நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நீண்ட பயணத்தின் போதும் எனது 3 வயது மகனை அழைத்து வருவது அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறேனோ என்கிற பயம் என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது”.

விளையாட வந்துவிட்டால் தினமும் உத்வேகம் பெறவேண்டும். ஆனால் முன்பு இருந்த உத்வேகம் இப்போது என்னிடம் இல்லை எனவும், இதனால் இனியும் தொடர எனக்கு மனமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் இறுதியில் அல்லது இந்த வருடத்தின் தொடக்கத்தின்போது இதை அறிவிக்க நினைத்தாகவும், அதன்படி, இனி விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இந்த ஆண்டின் சீசன் முழுவதும் தற்போதைக்கு விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ள அவர், கடந்த ஆண்டு ஒன்பது போட்டிகளில் பங்கேற்ற நான், இந்த ஆண்டு விளையாடுவதற்குப் போதுமான உடல் தகுதியில் இருப்பதாக உணர்கிறேன் என கூறியுள்ளார். குறைந்தபட்சம் அமெரிக்க ஓபன் தொடர் வரையாவது விளையாட வேண்டும் அதுவே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.