சிந்தனையும், கனவும் பெரிதாக இருந்தால் சாதனை பெரிதாக இருக்கும்

– அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தலைமைச் செயலகத்தில், அனைத்துத் துறை அரசு செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: இதுவரை வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,313 அறிவிப்புகள், அதாவது 80 விழுக்காடு அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் 10.01.2022 வரை சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகளையும் உடனடியாக வெளியிட்டு 100 விழுக்காடு இலக்கினை அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள் என அதிகாரிகளிடம் கூறினார்.

ஆணைகள் வெளியிடப்பட்டவுடன் நம்முடைய பணி நிறைவு பெறவில்லை என நான் ஏற்கெனவே கூறியதை தங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் வெளியிட்ட ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டில் வந்துள்ளனவா என கண்காணிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. ஆணைகள் வெளியிடப்பட்ட பணிகளுக்கான நிதி உரிய காலத்தில் விடுவிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுவதை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்.

Think big, Dream big, Results will be big என்கிற கூற்றின்படி நமது சிந்தனைகளும், கனவுகளும், குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நாம் சிறப்பாகச் செய்துகொண்டு இருக்கிறோம் என்ற மனநிலையினைத் தவிர்க்க வேண்டும். வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக நம்முடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நம்முடைய இலக்குகள் அனைத்தும் திட்டம் அடிப்படையில் மட்டுமே இல்லாமல், நாம் அடைய வேண்டிய நோக்கத்தினைச் சென்றடையும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து அடுத்த மாதம் ஆய்வு செய்ய இருக்கிறேன். அதற்குள் விடுபட்ட திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுங்கள். புதிய திட்டங்களைக் கொண்டு வாருங்கள் என பேசினார்.
தகவல்: தமிழக அரசின் செய்திக்குறிப்பு