ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதலைமச்சர் நாளை ஆலோசனை

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. எனவே கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகள், போக்குவரத்து, வணிக வளாகங்களில் 50 சதவீத மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 10 மணிமுறை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக வரவுள்ளன. எனவே, கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினரின் ஆலோசனையை ஏற்று முதலமைச்சர் நாளையே புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Source: News 18 Tamilnadu