கொரோனா விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்

2019 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இன்று வரை தொடர்ந்து வருகிறது. மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள் பலவும் இதனால் பாதிக்கப்பட்டன. வீட்டு விலங்குகளான நாய், பூனை முதல் காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டன. சில விலங்குங்களுக்கு நோயின் தீவிரம் அதிகரித்து உயிர் இழந்தும் உள்ளன.

மனிதர்களிடம் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவுகிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மனிதர்களுக்கு கொரோனா வந்தால் தங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதே போன்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உள்ளது. குறிப்பாக மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க தடுப்பூசிகள் இருக்கின்றன. ஆனால் விலங்குங்களுக்கு இது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் இல்லை.

பெல்ஜியமில் உள்ள ஆன்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று பாதித்தது. பெரிய அளவில் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல், வெறும் சளி பாதிப்பு மட்டுமே இதற்கு ஏற்பட்டது. ஆனால் மற்ற விலங்குகளுக்கு இது போன்று சாதாரண பாதிப்புகள் ஏற்படவில்லை. சிலவற்றிற்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.

நெப்ரேஸ்க்கா உயிரியல் பூங்காவில் வளர்ந்து வந்த பனி சிறுத்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தன. இதே போன்று கொரிலா குரங்குங்கள், சிங்கம், புலி போன்ற விலங்குங்களும் கொரோனாவால் 2020 ஆம் ஆண்டில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் மனிதர்களுக்கு கொரோனா பரவல் இருக்கும் வரையில் விலங்குகளுக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் ஏற்படும் மற்றும் சில வகை மரபு திரிபுகளை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கிருமிகளை ஆய்வும் செய்யும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சில வீட்டு விலங்குகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்படுகிறது. முதன்முதலில் ஹாங்காங்கில் உள்ள ஒரு நாயிற்கு தான் 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் உரிமையாளர்களுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அது இந்த நாயிற்கும் பரவி விட்டது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

மனிதர்களை பாதுகாப்பது போன்று விலங்குகளையும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க, தடுப்பூசிகள் ஒரு சிறந்த வழி. தற்போது ரஷ்யாவில் உள்ள பண்ணை விலங்குகள் மற்றும் நாய்கள், பூனைகள் ஆகியவற்றிற்கு கார்னிவாக்-கோவ் (karnivak-kov) என்கிற கொரோனா தடுப்பூசி அதிகார பூர்வமாக செலுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் மற்ற நாடுகளிலும் இது போன்ற தடுப்பூசிகளை அறிமுகம் செய்வதால் விலங்குகளையும் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாக்க முடியும்.

 

Source: News 18 Tamilnadu